Writer Karikalan

எழுத்தாளர் கரிகாலன்

கவிதை

நம்பிக்கை


அப்பா ஒரு மரத்தை
மழையாக மாற்றினார்
வெய்யிலை கனியாக மாற்றினார்
ஒரு மீனை கடலாக மாற்றினார்
என்னிடமிருந்த கோபத்தைக்கூட
ஒரு ராப் பாடலாக மாற்றினார்
அப்பா ஒன்றும் மந்திரவாதியில்லை
ஆனாலும் என் வாழ்வை
ஒரு தேன்கூடாகவும்
இதயத்தை ஒரு பூங்கொத்தாகவும் மாற்றினார்
இன்னும் என்ன சாகசம் செய்வாரென
காத்திருந்தபோது
ஒரு நாள் தன்னைப்
பிடி சாம்பலாக மாற்றி
உள்ளங்கையில் தந்தார்
அவர் பிள்ளையல்லவா நான்
என்னை ஒரு கண்ணீர்
துளியாக மாற்றினேன்
பிறகு அந்தக் கண்ணீர் துளியை
மணிமுத்தாறாக மாற்றினேன்
எங்களூர் விவசாயிகள் சேர்ந்து
மணிமுத்தாற்றை
நெல்மணிகளாக மாற்றினார்கள்
இப்போது நம்மால்
எதையும் மாற்றிவிட முடியும்
ஒரு காயத்தை  நம்பிக்கையாக
ஒரு சாதாரணத்தை அற்புதமாகவெல்லாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *