Description
என் வாழ்நாட்களின் பெரும்பகுதியை கவிஞனாகவே வாழ்ந்திருக்கிறேன். கவிதையின் வழி உருவானதே என் வாழ்வு. ஒரு கவிஞனாக வாழ்வதென்பது ஓர் ஊதாரியாக வாழ்வதற்கு சமம். பாணர் வாழ்முறைக்கான சமகாலச் சொல்தான் ஊதாரி. இப்படி வாழ என் பெற்றோர், மனைவி, பிள்ளைகள், நண்பர்கள், இச்சமூகம், என அனைவரும் அனுமதித்தனர். கணியன் பூங்குன்றனும் வள்ளுவனும் கம்பனும் எழுதிய நிலப்பரப்பிது. அம்முன்னோர்களின் அழகியலுக்கு குறையேற்படாமல் அவர்களுக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்து, கால் நூற்றாண்டு காலத்துக்கு மேலாக எழுதி வந்திருக்கிறேன்.
கவிஞன் என்கிற ஆகிருதியே, அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தோரையும், எதிர்த்துப் பாடுகிற அச்சமின்மையை வழங்கியது.
உலகக் கவிதைப் போக்குகளை அறிந்து அதற்கு இணையாகவும், சற்று மேலெழும்பியும் என் குரலை உயர்த்தி வந்திருக்கிறேன்.
ஒரு கவிஞனாக குறைபடாத வாழ்வு என்னுடையது. அதன் சாட்சியமாக ‘நாஸ்தென்கா வாழ்ந்த ஊர் ‘ தொகுப்போடு, உலக இலக்கியச் சமூகத்தின் முன் தலை நிமிர்ந்து நிற்கிறேன்.




